இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, May 16, 2015

தீர்ப்பில் திருத்தம்: குமாரசாமியை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்ததால் பரபரப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்துவதற்காக அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க, கர்நாடக தலைமை நீதிபதி  அனுமதி மறுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தீர்ப்பில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, நீதிபதி குமாரசாமி, தான் அளித்த தீர்ப்பு குறித்து தனது உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்தியதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர் உயர் நீதிமன்ற பதிவாளரை குமாரசாமி சந்தித்ததாகவும், அப்போது சில திருத்தங்களை நீதிபதி குமாரசாமி கூறியதாகவும், அதற்கு பதிவாளர் சில விளக்கங்களை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை திருத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பட்டீலிடம் இன்று திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அப்போது, "இந்த வழக்கின் தீர்ப்பை மாற்ற நீதிபதி குமாரசாமி மூன்று முறை தலைமை நீதிபதியை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனையில், இந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்துக்கு தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றமே தீர்வு காண முடியும்" எனக்கூறிவிட்டு,   வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் மனுவை ஏற்க கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் மறுத்துவிட்டார்.

தீர்ப்பை திருத்த முயன்ற நீதிபதி குமாரசாமியை, கர்நாடக தலைமை நீதிபதி சந்திக்க மறுத்துள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வி.கே.ரமேஷ்

No comments:

Post a Comment